Skip to main content

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? - அண்ணாமலை பதில் 

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

annamalai talks about bjp stands for erode bielection 

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சமீபத்தில்  வெளியிட்டது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தாமாகாவின் இளைஞர் அணி செயலாளர் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு இத்தொகுதியில் வெற்றி பெற்றதால் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன்,  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 

கடந்த முறை பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது அதன் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "பாஜக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க தேர்தல் பணி குழுவை அமைத்துள்ளோம்.  மேலும் இதுகுறித்து கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளான அதிமுக மற்றும் தமாகா கட்சியின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும்  ஜி.கே. வாசன் ஆகியோரிடமும் தொலைபேசி மூலம் பேசி உள்ளேன்.  அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகளை கட்சியின் மூத்த தலைவர்களுக்கும்  டெல்லியில் உள்ள தேசிய தலைமைக்கும் தெரிவித்துள்ளேன்.

 

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த எங்களது முடிவு மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதாக கேட்கிறார்கள்? ஈரோடு கிழக்கு  தொகுதியில் பாஜக போட்டியிடுமா? என்று முதலில் பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் பாஜக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி வரும். கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி கட்சி தலைமையிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறும் கருத்தை தெரிவிப்பேன். கூட்டணி தர்மம் நியாயம் என்று இருக்கிறது. எனவே குறுகிய கால செயல்பாட்டுக்காக அதனை மீறக்கூடாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் யார் போட்டியிட்டார்கள் என்று பார்க்க வேண்டும். கூட்டணியில் இருக்கும் போது சிலவற்றை அனுசரித்துப் போக வேண்டும்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்