பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் பொது கூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி நன்றாக உள்ளது. பிரதமர் மோடி நிறைய விஷயங்கள் சொல்வார், ஆனால் எதையும் செய்ய மாட்டார். இந்தியா பல்வேறு மதம், ஜாதிகள் கொண்ட நாடு. ஆனால் பாஜக நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையோடு செயல்படுகிறது. இந்தக் கட்சி தேவையா என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வால் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். தோல்வி பயத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு சந்திக்கத் தயங்குகிறது. ஜிஎஸ்டியால் கரூரில் கொசுவலை, ஜவுளி உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் அங்கு காலூன்றுவோம் என பாஜக கூறுவது எப்படி சாத்தியம்?. ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு கொள்கையால் எல்லையில் தீவிரவாதம் இருக்காது என்றார் மோடி. ஆனால் எல்லையில் எத்தனையோ ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம்.
60ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் மயமாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறியிருக்கிறது என்றால் அது காங்கிரஸால்தான், பாஜகவால் அல்ல. அமித்ஷா பக்கோடா விற்பது நல்ல தொழில் எனக் கூறியிருக்கிறார். முதலில் அத்தொழிலை அவர் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கட்டும்.
சட்டசபையில் ஜெயலலிதா புகைப்படம் திறந்தது சட்டப்படி தவறானது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார். ஜெயலலிதா படத்திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே காமராஜர் ஆட்சி விரைவில் மலரும். அதற்கான நேரம் காலம் வரும். காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை தான். பல கோஷ்டிகளாக இருந்தாலும் ஒரே கட்சியில் தான் இருக்கிறோம். கோஷ்டி பூசலால் கட்சி வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை போல பல அணிகளாக யாரும் பிரிந்து செல்லவில்லை.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கி அரசியலில் முதலில் ஈடுபடட்டும். அதன்பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
அவர்களது அரசியலை மக்கள் தீர்மானிப்பார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தும் என்று கூறினார்.
- ஜெ.டி.ஆர்
பக்கோடா தொழிலை அமித்ஷா அவர் மகனுக்கு சொல்லி கொடுக்கட்டும் - குஷ்பு காட்டம்!
சார்ந்த செய்திகள்
Next Story
குஷ்பு மீது போலீசில் புகார்
மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!
மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.