Skip to main content

“மிகுந்த மன வேதனையுடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன்” - நடிகை கௌதமி

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actress Gautami quits BJP

 

பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான கௌதமி அக்கட்சியிலிருந்து மிகுந்த மன வேதனையுடன் விலகுவதாக அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில், நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள்  மோசடி செய்யப்பட்டதாக  புகார் அளித்திருந்தார்.

அதில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாகக் கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்குக் கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.  

 

இந்த நிலையில் நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 ஆண்டுகாலமாக கட்சியிலிருந்து வருகிறேன்; ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ள கௌதமி, மிகுந்த மன வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்