Skip to main content

ஏன் கைது செய்யப்பட்டார் சந்திரபாபு நாயுடு? - வழக்கின் பின்னணி

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Why was Chandrababu Naidu arrested

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

சந்திரபாபு நாயுடுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸின்படி, பிரிவு 120 பி, பிரிவு 420 மற்றும் பிரிவு 465 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சந்திரபாபு கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டு கழகம், கியா போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த திட்டத்தை சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். இதையடுத்து, ஜெர்மன் பொறியியல் நிறுவனமான சிமென்ஸ் நிறுவனத்துடன் ஆந்திர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து இண்டஸ்ட்ரி சாப்ட்வேர் இந்தியா லிமிடெட் மற்றும் டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்புடன் இணைந்து திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சிமென்ஸ் நிறுவனம், வேலையில்லா இளைஞர்களுக்காக ஆறு சிறப்பு மையங்களை நிறுவும் பணியையும் மேற்கொண்டது.

 

சிமென்ஸ் நிறுவனம், இந்த திட்டத்தில் எந்தவித முதலீடு செய்யாவிட்டாலும், மூன்று மாதங்களுக்குள் ஐந்து தவணைகளில் ரூ.300 கோடிக்கு மேல் அந்நிறுவனத்திற்கு மாநில அரசு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மொத்த திட்ட மதிப்பான ரூ.3,356 கோடியில் 10 சதவீத பங்களிப்பை ஆந்திர அரசு ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணையின்படி, ஆந்திரப் பிரதேச அரசு டெண்டர் விடாமல் ரூ.300 கோடிக்கு மேல் வழங்கப்பட்டதன் மூலம் நிறுவப்பட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று தெரிவித்திருந்தது. மேலும், திறன் மேம்பாட்டிற்காக எந்தவித உறுதியான வருமானமும் இல்லாமல், அலைட் கம்ப்யூட்டர்ஸ், ஸ்கில்லர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஷெல் நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.

 

இந்த நிதிகளை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட பரிவர்த்தனை, ஷெல் நிறுவனங்கள் மூலம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நிதித்துறை அதிகாரிகளின் ஆட்சேபனையை மீறி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த நிறுவனங்களுக்கு உடனடியாக நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த ஆந்திர மாநில சி.ஐ.டி காவல்துறையினர், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.