Skip to main content

திட்டமிட்டு இரு குழந்தைகள் கொலை? குழம்பும் போலீஸ்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A saloonkeeper who incident two children in uttarpradesh

உத்தரப்பிரதேசம் மாநிலம், புடான் பகுதி அருகே உள்ள பாபா காலணியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருமணமாகி ஆயுஷ் (12), யுவராஜ் (10) மற்றும் அஹான்(8) என்ற 3 மகன்கள் இருந்தனர். வினோத் வசித்த வீட்டின் எதி்ரே, சஜித் என்பவர் முடி திருத்தம் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். வினோத்தும், சஜித்தும், எதிர் எதிரே இருப்பதால், இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், சஜித் தனது சகோதரர் ஜாவத்தை அழைத்துக் கொண்டு நேற்று (19-03-24) இரவு, வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சஜித், தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் செலவுக்கு ரூ.5,000 பணம் வேண்டும் என்று வினோத் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, வினோத்தின் மனைவி பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள்ளே சென்ற போது, தனக்கு உடம்பு சரியில்லை, அதனால் வீட்டு மாடியில் சிறிது நேரம் நடந்து வருகிறேன் என்று கூறி சஜித் மாடிக்கு சென்றுள்ளார். மேலும், சஜித் தன்னுடன் வினோத்தின் மூன்று மகன்களையும் அழைத்து மாடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, பணத்தை எடுத்து வினோத்தின் மனைவி மாடிக்கு சென்ற போது, சஜித் மற்றும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் தனது 3 மகன்களை கத்தியால் குத்திவிட்டு நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு வினோத்தின் மனைவி, இதனைக் கண்டதும் சஜித்தும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே, அங்கு வினோத்தின் மகன்கள் கத்தியால் குத்துப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இதில், ஆயுஷ் மற்றும் அஹான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, யுவராஜ் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத்துக்கும் சஜித்துக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை என்றும், சம்பவம் நடந்த அன்று வினோத் வீட்டில் இல்லாத நேரத்தை அறிந்து சஜித்தும் ஜாவத்தும் இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, இரண்டு கொலைகளைச் செய்த கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சஜித் போலீசாரிடம் பிடிபட்டார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக போலீசாரை தாக்கி சஜித் தப்பிக்க முயன்றுள்ளார். தப்பிக்க முயன்ற சஜித்தை போலீசார் சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். மேலும், சஜித்தின் சகோதரர் ஜாவத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்