Skip to main content

26 வருடப் பிணைப்பு; லட்சுமியின் மறைவால் கதறி அழும் மக்கள்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

pondicherry Manakkul Vinayagar temple elephant passed away

 

புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு, 5 வயதாக இருந்த லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.

 

தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும். கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் இந்த ஆண்டு கோவில் நிர்வாகம், வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதித்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட லட்சுமிக்கு காலில் புண்ணும் ஏற்படும். ‌

 

pondicherry Manakkul Vinayagar temple elephant passed away

 

ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்கள் பார்க்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் யானையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. தமிழக வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின் யானை லட்சுமி கோவிலுக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயில் இருப்பிடத்தில் இருந்து நடைபயிற்சி சென்றது. அப்போது கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்தது. சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

 

pondicherry Manakkul Vinayagar temple elephant passed away

 

மக்களுக்கு மிகவும் நெருக்கமான லட்சுமி யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு சடங்குகள் நிகழ்த்திய பிறகு மாலையில் முத்தியால்பேட்டை பஜனை மட வீதி இடத்தில் நல்லடக்கம் நிகழும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனிடையே மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டு, யானை லட்சுமி பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததை போல, யானை லட்சுமியை பார்த்து, தழுவி, மலர்கள் தூவி கதறி அழுதும், கண்ணீர் விட்டும் அஞ்சலி செலுத்தி வரும் காட்சி கல்நெஞ்சையும் கலங்க வைக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்