Skip to main content

"நாட்டின் ஒற்றுமைதான் முன்னுரிமை" - சவுரி சவுரா நூற்றாண்டு நிகழ்வில் பிரதமர் மோடி உரை!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

pm modi

 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான ஒரு நிகழ்வு சவுரி சவுரா. நூறாண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா என்ற இடத்தில், ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் மீது, ஆங்கிலேய போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து, ஆத்திரமடைந்த இந்தியர்கள், காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 போலீஸார் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 228 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் 6 பேர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த நிலையில், 172 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது இந்தியர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேல்முறையீட்டில், 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு 110 பேருக்கு வாழ்நாள் சிறையும், மற்றவர்களுக்கு நீண்டநாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 

 

இதற்கிடையே சவுரி சவுராவில் போராட்டக்காரர்கள், காவல்நிலையத்தைக் கொளுத்தியதைக் கண்டித்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காந்தியின் இந்த முடிவு இன்றுவரை ஒரு தரப்பால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த சவுரி சவுரா நிகழ்வு நிகழ்ந்து நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி, சவுரி சவுரா நிகழ்வின் நூற்றாண்டை ஒரு வருடம் முழுவதும் கொண்டாட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (04.02.2021) தொடங்கி வைத்து, காணொலி வாயிலாக உரையாற்றினார்.

 

பிரதமர் மோடி ஆற்றிய உரை: 

 

"சவுரி சவுரா சம்பவம் ஒரு காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டதோடு முடியவில்லை. சம்பவத்தின் செய்தி மிகப்பெரியது. பல்வேறு காரணங்களால், இது சிறிய சம்பவமாக கருதப்பட்டது, ஆனால் நாம் அதை அந்தச் சூழலில் பார்க்க வேண்டும். நெருப்பு காவல் நிலையத்தில் மட்டுமல்ல, மக்களின் இதயத்திலும் இருந்தது. சவுரி சவுரா சம்பவத்தின் தியாகிகள் பேசப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு பேசப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. வரலாற்றின் பக்கங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, ஆனால் அவர்களின் இரத்தம் நாட்டின் மண்ணில் உள்ளது. நமக்கு உத்வேகமளிக்கிறது.

 

நாட்டின் முன்னேற்றத்திற்குப் பின்னால் விவசாயிகள் உள்ளனர். சவுரி சவுரா போராட்டத்திலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். கடந்த ஆறு ஆண்டுகளில், விவசாயிகள் தற்சார்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கரோனா தொற்றின்போது கூட விவசாயத் துறை வளர்ந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு மண்டிகள் லாபகரமானதாக இருக்க, மேலும் 1,000 மண்டிகள் இணைய வழியிலான தேசிய விவசாய சந்தையில் இணைக்கப்படும். நாட்டின் ஒற்றுமைதான் நமது முன்னுரிமை. எல்லாவற்றிற்கும் மேலாக அதை மதிக்க வேண்டும் என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்த உணர்வோடு, இந்தியாவின் ஒவ்வொரு மக்களோடு நாம் முன்னேற வேண்டும்".

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

சார்ந்த செய்திகள்