Skip to main content

கம்பீர் அறக்கட்டளை மீது தாமதமின்றி நடவடிக்கை - தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் தகவல்!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

gautam gambHir

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுவதும் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேநேரத்தில், டெல்லியிலுள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கு மருந்துகளை அளித்து உதவி செய்தனர். இதில் சிலர் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளைப் பதுக்குவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மருந்துகளைப் பதுங்குவது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

இதில், மற்ற அரசியல்வாதிகளைப் போல பாஜக எம்.பி-யான கம்பீரும் மக்களுக்குத் தேவையான மருந்துகளை விநியோகித்து வந்தார். இந்நிலையில், தொற்றுநோய் காலத்தில் மருந்துகளைப் பதுக்கியதாகக் கம்பீர் உட்பட மூவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருந்து பதுக்கல் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கம்பீரிடம் விசாரிக்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டனர். 

 

இந்தநிலையில் இன்று தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கம்பீர் அறக்கட்டளை, ஃபேபிஃப்ளூ அனுமதியின்றி கொள்முதல் செய்து, சேமித்து உரிய அனுமதியின்றி விநியோகித்ததாகவும், இதற்காக கம்பீர் அறக்கட்டளை மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

 

இதற்கு முன்பு கம்பீர் அறக்கட்டளை மருந்துகள் விநியோகித்தததில் எந்த தவறும்  இல்லை என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் சமர்ப்பித்த அறிக்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்