Skip to main content

தகனம் செய்யும் மைதானம்..தகரத்தை வைத்து மறைத்த அரசு - உ.பி அவலம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

lucknow cremation site

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கரோனாவிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனால் உடல்களைத் தகனம் செய்யும் இடமும் நிரம்பி வழியும் அவலம் ஏற்பட்டுள்ளது. பைன்சாகுண்ட் பகுதியில் உள்ள தகனம் செய்யும் பகுதியிலும் உடல்கள் குவிந்து வருகின்றன. ஒரேநேரத்தில் பல்வேறு உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. பைன்சாகுண்ட் தகனம் செய்யும் மைதானத்தில், உடல்கள் தகனம் செய்யப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

 

இந்தநிலையில், பைன்சாகுண்ட் தகன மைதானத்தை, தகரங்களைக் கொண்டு அடைத்துள்ளது லக்னோ மாநகராட்சி. அங்கு குவியும் உடல்களின் எண்ணிக்கையை மறைக்கவே இந்த நடவடிக்கைக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி, “கடந்த 10 நாட்களில் 630 உடல்கள் நகரம் முழுவதும் தகனம் செய்வதற்காக எடுத்துவரப்பட்டன. புதன்கிழமை, பைன்சாகுண்ட் மற்றும் குலலகாட் பகுதிகளில் உள்ள தகனம் செய்யும் இடங்களுக்கு 97 உடல்கள் கொண்டுவரப்பட்டன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உடல்களை தகனம் செய்ய டோக்கன் வழங்கப்பட்டன. தகனம் செய்யும் இடத்தில் உடல்களுக்கு இடமில்லை; மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் படுக்கை இல்லை. பைன்சாகுண்ட் மைதானத்தை மூடுவது, தகனம் செய்ய கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையை மறைக்கும் அப்பட்டமான முயற்சி என தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "அவலத்தை மறைக்க நேரத்தையும், வளங்களையும், ஆற்றலையும் வீணாக்குவதற்குப் பதிலாக, தயவுசெய்து தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். இது காலத்தின் தேவை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்