Skip to main content

பெண்களின் வாக்குகளை கவர  8 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடியா? - எடப்பாடியின் அடுத்த பாய்ச்சல்! 

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய புதிய அறிவிப்புகளை செய்து வருகிறார். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து தரப்பு மக்களைக் கவரும் வகையில் என்னென்ன புதிய அறிவிப்புகள், சலுகைகள் வழங்கலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

 

தமிழக விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்ற பயிர்க் கடன்கள் முழுவதையும் சமீபத்தில் ரத்து செய்தார். அந்த வகையில், 16 கோடியே 43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன்கள் ரத்து செய்யப்பட்டன.

 

விவசாயிகளை தேர்தலில் கவர்வதற்காக அவர்களின் பயிர்க் கடன்களை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி, பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக அடுத்து ஒரு புதிய அறிவிப்பை செய்யவிருக்கிறாராம்.

 

தமிழகத்தில் தற்போது 4 லட்சத்து 30,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. 20 நபர்களைக் கொண்டு இயங்கும் இந்தக் குழுக்களில் ஏழை மற்றும் நடத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இருக்கின்றனர். ஒரு குழுவுக்கு அதிகப்பட்சமாக 10 லட்சம் ரூபாயை 11 சதவீத வட்டியுடன் வழங்கி வருகிறது கூட்டுறவு வங்கிகள். கடனை திருப்பிச் செலுத்தினால் மீண்டும் கடன் வழங்கப்படும். 

 

அந்த வகையில்,  கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தற்போது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்று, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலுவைத் தொகையாக இருக்கும் இந்த 8 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களின் குடும்பத்தின் ஆதரவை சட்டமன்றத் தேர்தலில் பெறமுடியும் என எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

 

இதுகுறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எவ்வளவு கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது? என்ற புள்ளிவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார். விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்தது போல, மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருப்பதாகவும், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் கூட்டுறவுத் துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்