Skip to main content

“கூடாரத்தையே காலி செய்து விட்டார்கள்” - கடுமையாக விமர்சித்த பிரேமலதா!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார். அப்போது அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கலந்துகொள்ளவில்லை.

Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், “ஜெயலலிதா இல்லாத சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, விஜயகாந்த் மறைந்த பிறகு முதல் முறையாக சந்திக்கும் பாரளுமன்ற தேர்தல் இது. நாங்கள் இருவரும் ராசியான வெற்றி கூட்டணியை வரும் காலத்தில் நிச்சயமாக சாதித்துக் காட்டுவோம். அ.தி.மு.க.வும் - தே.மு.தி.கவும் மக்களுக்கு ஒரு சிறந்த அடையாளமான கட்சியாக விளங்குகிறது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

இரண்டு நாட்கள் வரைக்கும் கூட்டணியில் இருக்கின்றோம் இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் எல்லாம், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடனே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூடாரத்தையே கிளப்பி வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தே.மு.தி.க. அப்படி கிடையாது. ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு மண்டலக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபித்து காட்டுகிறார். ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான். துளசி வாசம் மாறலாம். தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. என்ன நடந்தாலும் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இருக்கும் என உறுதி கொடுத்தேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்