Skip to main content

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தில் காலிஸ்தான் தீவிரவாதியா?

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொள்ள இருக்கும் இரவு விருந்தில் காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சீக்கியர்களுக்கான தனிநாடு அல்லது காலிஸ்தான் கோரும் அமைப்பும், கனடாவில் தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டதுமான சர்வதேச சீக்கிய இளைஞர் படையைச் சேர்ந்தவர் ஜஸ்பால் அத்வல். கடந்த 1987ஆம் ஆண்டு இவர் உட்பட நான்கு பேர் மல்கியத் சிங் சித்து என்பவரைக் கொல்ல முயற்சி செய்தனர். 

 

Justin

 

மல்கியத் சிங் சித்து அகாலி தளம் கட்சியின் தலைவராகவும், பஞ்சாப் மாநில அமைச்சராகவும் இருந்தவர். இந்தக் கொலைமுயற்சியில் ஐந்து முறை சுடப்பட்டும் அவர் உயிர்தப்பினார். இந்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றும், கனடாவின் உளவாளி அமைப்பு வழங்கிய சாட்சியங்களால் இந்த நால்வரும் தண்டனை அனுபவிக்காமல் விடுவிக்கப்பட்டனர்.

 

தற்போது, தொழிலதிபராக இருக்கும் ஜஸ்பால் அத்வலுக்கு கனடா பிரதமர் டெல்லியில் கலந்துகொள்ள இருக்கும் இரவு விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டொரோண்டோ சன் மற்றும் நேஷனல் போஸ்ட் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

Justin

 

சன் பத்திரிகையில், இந்தியா வந்திருக்கும் கனடா பிரிதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி மற்றும் ஜஸ்பால் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் இரவு விருந்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன.

 

கனடாவின் பிரதமர் அலுவலகம் ஜஸ்பால் அத்வலுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழைத் திரும்பப் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஜஸ்பாலுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஜனவரி 11ஆம் தேதி இந்தியாவிற்கு வந்ததாகவும், எந்தவிதமான அரசியல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் ஜஸ்பால் நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். ஆனால், சன் பத்திரிகை இந்த அழைப்பை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. 

 

இதுவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருப்பதற்கு காலிஸ்தான் விவகாரம் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்