Skip to main content

திமுகவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் பேருந்து கட்டண உயர்வு தேவையில்லை: மு.க.ஸ்டாலின்

Published on 13/02/2018 | Edited on 13/02/2018
eps stalin


தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து திமுக நடத்திய ஆய்வு அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.

அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழு, ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையாக தாக்கல் செய்தது.

திமுக குழு தயார் செய்த அந்த அறிக்கையை முதல்வரிடம் இன்று அளித்த மு.க.ஸ்டாலின் அதனை அமல்படுத்த பரிந்துரைத்தார். திமுக தயார் செய்த இந்த ஆய்வறிக்கையில், போக்குவரத்து கழக இழப்பீடுகளை அரசே ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

stlin


முதலமைச்சர் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

போக்குவரத்துக் கழக சீரமைப்பு தொடர்பாக 27 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கைப்படி செயல்பட்டால் மக்கள் தலையில் பேருந்து கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.

போக்குவரத்துகழகங்களை பொதுமக்களின் சேவையாக கருதி அதன் மூலமாக ஏற்படக்கூடிய நஷ்டம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

டீசல் மீதான கலால் மட்டும், மதிப்புகூட்டு வரியை ரத்து செய்ய யோசனை கூறியுள்ளோம். இந்த இரண்டு வரியையும் ரத்து செய்துவிட்டு ஒரே வரியான ஜி.எஸ்.டியை அமல்படுத்த கோரியுள்ளோம். போக்குவரத்துத் துறையில் கமிஷன் வாங்காமல் இருந்தாலே நஷ்டம் ஏற்படாது.
 

sta 1


இது போன்ற தி.மு.க ஆய்வறிக்கையில் கூறியுள்ள 27 கோரிக்கைகளை அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வு தேவையில்லை. தி.மு.க தரப்பில்  ஆய்வறிக்கையை வழங்கிய பிறகு முதலமைச்சர் தரப்பில் இருந்து எந்த உறுதியும் வழங்கவில்லை. இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை இல்லையென்றால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும்.

சட்டப்பேரவையில் எந்த அடிப்படையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது . ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநரை அழைத்தும், படத்திறப்பு விழாவில் அவர்கள் பங்கேற்காதது ஏன்? ஜனநாயகத்தை காக்கும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைத்ததை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.