Skip to main content

உங்களை ரொம்ப நம்பினேன்..! முதல்வர் காலில் விழுந்த சிட்டிங் பெண் எம்.எல்.ஏ..!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் சுழன்று பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இருவரும் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல நேற்று (14.03.2021) இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். திருச்சியில் இருந்து காரில் செல்ல திட்டமிட்டு இருந்தனர். அதன்படி முதலில் வந்திறங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ் காரில் ஏறி தேனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

அதன்பிறகு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அவர்களது வரவேற்பை பெற்றுக்கொண்டு சேலத்திற்கு தன்னுடைய காரில் புறப்பட்டு செல்ல வந்தபோது, மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, ''அண்ணே உங்கள ரொம்ப நம்புனேன்” என்று சொல்லி காலில் விழுந்து அழுதார். அவருக்கு முதல்வர் ஆறுதல் கூறி “பொறுத்திருங்கள்” என்ற ஒற்றை வார்த்தையைக் கூறினார். பின்னர், “எனக்கு எம்எல்ஏ வாய்ப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் முதலமைச்சருக்கு விசுவாசமாக இருப்பேன்'' என்று கூறிவிட்டு அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினார் எம்.எல்.ஏ பரமேஸ்வரி. 

 

அப்போது முதல்வரை வரவேற்க காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பரஞ்ஜோதி, ப.குமார், கு.ப.கிருஷ்ணன், பத்மநாபன், இந்திராகாந்தி, ஆவின் சேர்மேன் கார்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்